பாரதீய கல்வி (பகுதி - 5)

பாரதீய கல்வி (பகுதி - 5)

பாரம்பரிய பாரதீய உயர் கல்வி முறை

கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி பெற சாத்தியமாக இருந்தது என்பதே 4-ம் பகுதியில் பார்த்தோம். மாணவர் திருப்திகரமாக முன்னேறினாரா இல்லையா என்பதை ஆசிரியர் தீர்மானிப்பார். தொடக்கக் கல்வியின் முடிவில் மாணவர்கள் ஏதேனும் ஒரு துறையில் பயிற்சி பெற்றனர்.

தொழில் பயிற்சி பெற என்னனென்ன வழிகள் இருந்தன?

முக்கியமாக மூன்று வகையான பயிற்சிகள் இருந்தன. சில தொழில்கள் வேலை மூலம் பயிற்சி அளித்தன, இவற்றிற்கு உரை ஆய்வு ஏதும் அவசியம் கொண்டிருக்கவில்லை. மற்ற சில தொழில்களுக்கு நடைமுறை வேலை பயிற்சியுடன் ஓரளவு உரை ஆய்வு இருந்தது. மேலும் சிலர் உரை அடிப்படையிலான தீவிர கல்வி பயிற்சி பெற்றனர்.

படைப்பாற்றல் கொண்ட கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுக்கப்பட்டன, மாணவர் பயிற்சி பெறப்பெற நுணுக்கங்கள் தேர்ச்சி பெற்றன.

எந்த தொழிலை செய்ய வேண்டும் என்பதை மாணவர் தீர்மானிப்பதில் சமூகம் பங்கு கொண்டிருந்ததா? சில தொழில்கள் மாணவரின் ஜாதிக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்கப்பட்டன, அதாவது, அக்குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் மட்டுமே இந்த தொழில்களைக் கற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். மற்ற தொழில்கள் யார் வேண்டுமானாலும் பின்பற்ற திறந்தவையாக இருந்தன.

[வெளிப்புற அச்சுறுத்தல்கள் மற்றும் பிற சமூகக்காரணங்களைப் பொறுத்து இந்த திறந்த தன்மையும் உள்முகதன்மையும் மாறுபட்டு கொண்டிருந்தது. அச்சுறுத்தல்கள் அதிகமாக இருந்தபோது ஜாதிகளில் உள்முகதன்மையும் அதிகரித்தது.]

ஜாதிக்கு கட்டுப்பட்ட தொழில்களில் வேதங்கள் படிப்பது (பிராமணர்கள்) மற்றும் வர்த்தகம் மற்றும் வங்கி (வைசியர்கள்) தொழில்கள் முதலியவை அடங்கும்.

பொறியியல் தொழில்கள் (இரும்புக் கலைஞர்கள், தச்சர்கள், கட்டடக் கலைஞர்கள், கொத்தனார்கள் மற்றும் பல), துணி நெசவு, கலைகள் (கல் சிற்பம், உலோக சிலை சிற்பம், ஓவிய கலைகள் மற்றும் பல) பெரும்பாலும் அதே ஜாதியின் உறுப்பினர்களால் பின்பற்றப்பட்டன, ஆனால் மற்றவர்களும் அவர்களிடமிருந்து பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டனர். மருத்துவம், கணிதம் மற்றும் வானியல், கவிதை மற்றும் இலக்கியம் போன்ற பிற தொழில்களும் பெரும்பாலும் பெற்றோரிடமிருந்து குழந்தைகள் கற்றுக் கொண்டிருந்தார்கள், ஆனால் மற்றவர்களுக்கு ஆசிரியர்/குருவின் தனிப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் அவற்றைக் கற்றுக்கொடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. குழந்தைகள் குடும்ப பாரம்பரியத்தை பெருமளவில் பின்பற்றினர்; இருப்பினும், இதில் எந்தவிதமான கட்டாயமும் இல்லை.

பொருட்கள் விற்பனை மற்றும் பொது உழைப்பு போன்ற பயிற்சி திறமை அவசியப்படாத வேலைகளுக்கு ஜாதி தடை எதுவும் இல்லை.

கசாப்பு, தோல் வேலை, தகனம், துப்புரவு போன்ற தீட்டுப்படுத்தும் வேலைகளை தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்களால் செய்யப்பட்டன.

மருந்து மற்றும் வன பொருட்களை பெறுதல், பாம்பு மற்றும் எலி பிடிப்பு, கழைக்கூத்தாடி குழுக்கள் மற்றும் இயற்கை மற்றும் இயற்கை திறன்களுடன் நெருங்கிய தொடர்புடைய சில படைப்புகள் பழங்குடி மக்களால் செய்யப்பட்டன; இவர்களும் பிரதான சமூகத்தின் வகைப்பாட்டிற்கு வெளியே இருந்தன.

திறன் பயிற்சி எவ்வாறு கொடுக்கப்பட்டது? மக்களில் கணிசமான சதவீதத்தினர் ஒரு பாரம்பரிய குடும்பத் தொழிலைக் கொண்டிருந்தனர், அது திறன் மற்றும் அனுபவ அடிப்படையிலான அறிவை சார்ந்து இருந்தது. அனைத்து பயிற்சியும் (ஒரு மூத்த உறுப்பினரிடமிருந்து) அறிவுறுத்தல் மற்றும் பயிற்சி மூலம் நடைபெற்றது. விவசாயிகள், துணி நெசவாளர்கள், குயவர்கள், கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்கள், வங்கியாளர்கள் மற்றும் வணிகர்கள், விளையாட்டு மற்றும் போர் வீரர்கள் மற்றும் இதுபோன்ற பல தொழில்கள் ஆரம்பக் கல்வியைத் தாண்டி தங்கள் தொழிலைத் தொடர மிகக் குறைவான உரையோ தத்துவார்த்த ஆய்வையோ பயன்படுத்தினர்.

பிற ஆய்வு அடிப்படையிலான பயிற்சி எவ்வாறு நடைபெற்றன? ஆரம்பகால பல்கலைக்கழகங்கள் பாரதத்தில்தான் நிறுவப்பட்டன என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவை நாடு முழுவதும் நிறுவப்பட்டு மன்னர்களால் ஆதரிக்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் வந்த நேரத்தில் வாராணஸியில் உள்ள பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. 1783-ம் ஆண்டில் இங்கிலாந்தின் பேராசிரியர் A. மாகோனோச்சி (Prof. A. Maconochie), ‘Hindoos’-ன் (அந்த நேரத்தில் இந்தியர்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டார்கள்) ஆய்வுகளின் மிக உயர்ந்த குணங்களைப் பாராட்டினார். அவர் வானியல், தொல்பொருட்கள், மதம், அரசு, கவிதைகள், வரலாறு, மரபுகள் மற்றும் பாரதத்தின் கதைகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வுகள் அனைத்திற்கும் மையமாக பனாரெஸ் (வாராணஸி) பற்றி அவர் குறிப்பிடுகிறார்

‘History of Indigenous Education in the Panjab’ என்ற புத்தகத்தில் G. W.  லீட்னர் (G. W. Lietner) கூறுகிறார், "ஆயிரக்கணக்கான சமஸ்கிருத அல்லது அரபு கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள், இதில் கிழக்கத்திய இலக்கியம் மற்றும் கிழக்கத்திய சட்டம், தர்க்கம், தத்துவம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றின் அமைப்புகள் மிக உயர்ந்த தரத்திற்கு கற்பிக்கப்பட்டன… ...இந்த பள்ளிகளின் துவாரங்களின் வழியே கல்வியின் மீது அதன் உள்ளடங்கிய நலனுக்காகவும் தன்மை மற்றும் மத கலாச்சாரத்தின் மீது அதன் செல்வாக்கிற்காகவும் பக்தி உணர்வுமிக்க சுவாசம் வீசியது.”

இதற்கு இணையாக, மருத்துவம், வானியல், தத்துவம், கணிதம் மற்றும் பல படிப்புகளைத் தொடரும் மாணவர்களுக்காக குருக்களால் நடத்தப்படும் ஆசிரமங்கள் இருந்தன, அங்கு அவர்கள் குருகுல முறையைப் பின்பற்றினர். படிப்பு காலத்தில் மாணவர்கள் குரு வசிக்கும் வீட்டுடன் இணைக்கப்பட்ட ஆசிரமங்களில் தங்கியிருந்தனர். திறமை மிகுந்த ஆசிரியர்களின் புகழ் தொலைதூரம் பரவியது, இந்த குருக்களிடமிருந்து கல்வி பெற மாணவர்கள் பல நேரங்களில் நீண்ட தூரம் பயணித்து, ஆசிரமத்தில் பல ஆண்டுகள் கழித்தனர். ஆசிரியரின் குருதக்ஷிணை மாணவரின் சக்திக்கேற்ப வழங்கப்பட்டது. சில ஆசிரியர்களுக்கு ஆசிரம செலவுகளுக்கு வசதிவாய்ந்த பண்ணையார்கள் மானிய நிலம் ஏற்படுத்தி கொடுத்தனர்.

1824-ம் ஆண்டில், மலபார் கலெக்டர் தனது மாவட்டத்தில் இறையியல், சட்டம், வானியல், மீமெய்யியல் (Metaphysics), நெறிமுறைகள் மற்றும் மருத்துவ அறிவியல் ஆகியவற்றில் தனியார் ஆசிரியர்களிடமிருந்து கல்வி பெற்று வரும் 1,594 அறிஞர்களின் விவரங்களை அனுப்பினார்.

குண்டூர் கலெக்டரின் அறிக்கை படி, “மாவட்டத்தில் உள்ள இறையியல், சட்டம், வானியல் போன்றவை சில சீடர்களுக்கு பொதுவாக பிராமணர்களால் தனிப்பட்ட முறையில் கற்பிக்கப்பட்டன, எந்தவொரு கட்டணமும் அல்லது வெகுமதியும் செலுத்தாமல், அவர்கள், கற்பிக்கும் பிராமணர்கள் ஜில்லாவின் பண்டைய ஜமீன்தார்களால் அவர்களின் முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட மானிய நிலத்தின் மூலம் பொதுவாக பராமரிக்கப்படுகின்றன. இறையியல், சட்டங்கள் மற்றும் வானியல் போன்றவை தனிப்பட்ட முறையில் கற்பிக்கப்படும் 171 இடங்கள் உள்ளன, அவற்றில் சீடர்களின் எண்ணிக்கை 939 ஆகும்.”

மெட்ராஸ் பிரெசிடென்சி 5431 மாணவர்களுடன் 1,101 பள்ளிகளில் உயர் கல்வி கற்பதாகவும், இதில் ராஜமுந்திரி இதுபோன்ற 279 பள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளியில் 173, நெல்லூரில் 137 மற்றும் தஞ்சையில் 109 பள்ளிகள் இருந்தன. அறிஞர்கள் வேதங்கள், சட்டம், வானியல், கவிதை அல்லது இசை மற்றும் பலவற்றைக் கற்றுக்கொண்டனர்.

வாராணசி தவிர, காஷ்மீர், மிதிலா (பீகார்), நபத்வீபா (வங்காளம்) நாடு முழுவதிலுமிருந்து வரும் மாணவர்களின் கற்றல் மையங்களாக நன்கு அறியப்பட்டிருந்தன. தெற்கில், உயர்கல்விக்கான நிறுவனங்கள் பெரிய கோயில்களுடன் இணைக்கப்பட்டிருந்தன.

நபத்வீபாவில் உயர்கல்வி நிறுவனங்கள் 'டொல்' என்று அழைக்கப்பட்டன. டொல் கட்டிடங்கள் மண் சுவர்களைக் கொண்ட ஓலைக் கூரை போட்ட அறைகள் மட்டுமே கொண்டிருந்தன. டொல் அனைத்து சாதிகளுக்கும் திறந்திருந்தன, ஆனால் ஆசிரியர்கள் பிரத்தியேகமாக பிராமணர்கள். வங்காளம் மற்றும் பீகாரில், டொல் பணக்காரர்களின் தன்னார்வ தானங்கள் அல்லது நில தானங்களை சார்ந்து இருந்தன. டொல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் பயிற்சியை வழங்கினார். மாணவர்கள் தங்கள் உணவு மற்றும் ஆடைகளை ஆசிரியரிடமிருந்தோ அல்லது உள்ளூர் கடைக்காரர்களிடமிருந்தோ அல்லது நில உரிமையாளர்களிடமிருந்தோ அல்லது பிச்சை மூலமாகவோ பெற்றனர். சமஸ்கிருத மொழியும் இலக்கியமும் முக்கிய படிப்பு ஆய்வுகளாக இருந்தன.

(பாகிஸ்தான்) பஞ்சாபில் உள்ள முல்தான் இந்து கற்றலின் மற்றொரு மையமாக இருந்தது. இது வானியல், ஜோதிடம், கணிதம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றிற்கு பிரபலமாக இருந்தது. (பாரத) பஞ்சாபில் உள்ள சிர்ஹிந்த் ஆயுர்வேத மருத்துவப் பள்ளிக்கு பிரபலமானது.

வேத மற்றும் மத பயிற்சி எவ்வாறு நடைபெற்றன? வேதத்தைப் பற்றிய ஆய்வு பெரும்பாலும் கோயில்களிலோ அல்லது துறவிகளால் நடத்தப்படும் மடங்களிலோ இணைக்கப்பட்டிருந்த வேத பாடசாலைகளில் நடந்தது. மாணவர்கள் மிகவும் சிக்கனமான வாழ்க்கை முறையை வாழ்ந்தனர், ஒவ்வொரு நாளும் தங்கள் உணவுக்காக பிச்சை எடுக்க வேண்டியிருந்தது. நன்றியும் மரியாதைக்குரிய அடையாளமாகவும் மாணவரின் தகுதிக்கேற்ப குருதக்ஷினை குருவுக்கு வழங்கப்பட்டது.

லீட்னரின் அறிக்கையில் அவர் கூறுவது, "ஒப்பீட்டளவில் பேசினால், ரஞ்சித் சிங்கின் காலத்தில் வேதங்கள் பஞ்சாபில் சிறிதளவே கற்பிக்கப்பட்டது, ஆசிரியர்கள் முக்கியமாக டெக்கனிலிருந்து (Deccan) வந்தனர்"; ஆனால், சமஸ்கிருதத்திலும் இலக்கணத்திலும், "பஞ்சாப் கற்றல் இந்தியா முழுவதும் பெரும் புகழ் பெற்றிருந்தது, இத்துடன் பஞ்சாபி பண்டிதர்கள் நியாயம், மீமான்சம், தர்மசாஸ்திரங்கள், வேதாந்தம் மற்றும் சாங்க்யா (ஆறு சாஸ்திரங்கள்) மற்றும் சித்தாந்த, வானியல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினர்."

மசூதிகளுடன் இணைக்கப்பட்ட மதரஸாக்களில் இஸ்லாமிய ஆய்வுகள் நடந்தன.

தற்காப்பு மற்றும் சண்டை பயிற்சி எவ்வாறு கொடுக்கப்பட்டன? அவற்றைக் கற்றுக்கொள்ள விரும்பும் எவருக்கும் தற்காப்பு கலைகள் மற்றும் உடல் பயிற்சி வழங்கப்பட்டன. வழக்கமாக சண்டை நுட்பங்களுக்கான பயிற்சி 'அகாடா' என்று அழைக்கப்படும் அதற்கென்றே தயாரிக்கப்பட்ட மைதானங்களில் நடந்தது. பாரம்பரிய சேனை வீரர்கள், காவல்படை, காவலாளிகள், மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இந்த உத்திகளைக் கற்றுக்கொள்வது கட்டாயமாக இருந்தது. இருப்பினும், அவற்றைக் கற்றுக்கொள்வது அனைத்து சமூகங்களுக்கும் திறந்திருந்தது. சில வேத பாடசாலைகளின் மாணவர்களும் இந்த நுட்பங்களில் பயிற்சி பெற்றனர். பயிற்சிக்கு மாணவர்கள் பின்பற்ற வேண்டிய கண்டிப்பான ஒழுக்கங்கள் தேவைப்பட்டன.

சுருக்கமாக, பாரதம் முழுவதும் கல்வி பரவலாகவும் கிட்டத்தட்ட அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் புவியியலால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும் அறிகிறோம். பெரும்பாலான பெண்கள் வீட்டிலிருந்து தொடக்கக் கல்வியைப் பெற்றனர், மேலும் சிலர் தொடர்ந்து வீட்டிலேயே பயில்வதன் மூலம் அறிஞர்களாக மாறினர். மாணவிகள் பள்ளிகளில் மிகக் குறைவாகவும், கல்லூரிகளில் அதைவிட குறைவாகவும் இருந்தனர்.  பிரதான சமுதாயத்தில் இருந்த கல்விச் சாலைகளில் இருந்து கல்வியைப் பெற இயலாத நபர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு வைத்த தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்களே; இவர்கள் செய்து கொண்டிருந்த தொழிலை தாமே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தனர்.

கல்வி பெறுதல் முறையான மற்றும் முறைசாரா வழிகள் மூலமாக இருந்தது.  ஆசிரியரால் தனிப்பட்ட கவனிப்பின் அடிப்படையில் மாணவரின் சான்று வழங்கப்பட்டது. பள்ளி ஆரம்பிக்க மற்றும் முடிக்க வேண்டிய வயது கடும் கட்டாயமாக நிர்ணயிக்கப்படவில்லை. இதேபோல் ஒரு தொழிலுக்கான பயிற்சியைத் தொடங்குவதற்கான வயதும் தொழிலைப் பொறுத்தே இருந்தது. மாணவர்கள் தங்கள் ஆர்வத்திற்கும் திறன்களுக்கும் ஏற்ப பலவிதமான கல்வி மரபுகள் மற்றும் துறைகள் இருந்தன. சில மரபுகள் அவற்றை யார் கற்றுக் கொள்ளலாம் என்பதில் கண்டிப்பாக இருந்த அதே நேரத்தில் மற்ற மரபுகள் அனைவருக்கும் திறந்திருந்தன.

வீடு அல்லது சமூகத்திலிருந்தும், தனிப்பட்ட குருக்களால் நடத்தப்படும் ஆசிரமங்களிலிருந்தும், உள்ளூர் கல்லூரிகளிலிருந்தும், வேத பாடசாலைகள் மற்றும் மதரஸாக்களிலிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் உயர் கல்வி பெறப்பட்டது.

பெரும்பாலான கல்விக்கு வேண்டிய நிதிகள் முழுக்க முழுக்க பரோபகாரம் மற்றும் தொண்டு மூலமே அளிக்கப்பட்டது என்பதைக் காண்கிறோம். உள்கட்டமைப்பு இன்றியமையாத தேவைகளுக்கும், அந்தந்த ஆய்வுத் துறைகளில் முன்னேற அத்தியாவசியமானவையாகவும் மட்டுமே இருந்தன.

கல்வி மாணவருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ   ஒரு சுமையாக இருக்கவில்லை. இந்த வழியில் கல்வி அர்த்தமுள்ளதாக இருந்தது மற்றும் தனிநபரின் மற்றும் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்தது.

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு எப்படிப்பட்ட தொழில் வல்லுநர்கள் சமுதாயத்தை உருவாக்கினார்கள்?

(அடுத்த பகுதியில் தொடரும்)

References:

Dharampal (2000). The Beautiful Tree, Other India Press. Available at http://www.arvindguptatoys.com/arvindgupta/beautifultree.pdf

G. W. Lietner (1882). History of Indigenous Education in the Panjab, Superintendent of Govt. Printing.Available at http://www.panjabdigilib.org/webuser/searches/displayPage.jsp?ID=6767&page=1&CategoryID=1&Searched=

Stella Kramrisch (1958). Traditional India: Structure and Change ... Traditions of the Indian Craftsman, Journal of American Folklore Vol. 71, No. 281.Extract available at https://www.jstor.org/stable/538558?read-now=1&refreqid=excelsior%3Af4ba56628e82d7e06d48a371df7b221a&seq=2#page_scan_tab_contents

Dr Ishrat Jahan (2018). Socio Cultural Life in Medieval History, Lulu Publication.